நோக்கமும் நிகழ்வும்



மரபுக் கவிதைகளுக்காக எத்தனையோ வலைப்பதிவுகள் இருக்க, மேலும் ஒரு பதிவு எதற்கு?

எத்தனையோ பதிவுகள் இருப்பதுதான் சிக்கலே... எல்லாரும் எழுதிக்கொண்டே போனால் யார்தான் படிப்பது? யார்தான் கவிதைகளைத் தரம் பார்ப்பது? அதையும் நாம்தான் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டே இந்தப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது!

நீங்கள் மரபுக் கவிதைகள் எழுதக் கூடியவரா? முதல் வேலையாக இந்தப் பதிவில் தங்களை இணைத்துக் கொள்ளுங்கள்... பிறகு தங்கள் கவிதைகளை [zhaghaan@gmail.com] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள், தங்களைப் பற்றிய, கவிதையைப் பற்றிய, கவிதை எழுந்த நிலையைப் பற்றிய சிறு குறிப்புகளுடன். எந்தப் பரிசீலனையும் இன்றிக் கவிதை பதிப்பிக்கப்படும். பிறகு மற்றவர்கள் அக்கவிதையைப் பரிசீலிக்கலாம், கருத்துக்களை வெளியிடலாம். தாங்களும் பிறரின் கவிதைகளை விமர்சிக்கலாம்.

புதுயுகப் புலவர்களை ஒன்று திரட்டி அனைவரும் பிறரின் படைப்புத்திறனை அறிந்து ஆய்ந்து ஆக்கப்பூர்வமாய் முன்னோக்கிச் செல்லவே இந்த வலைப்பதிவு.

தங்களின் மேலான ஆதரவுடன் அது நிறைவேறும் என நம்புகிறேன்...

சனி, 11 செப்டம்பர், 2010

ஆசிரியர்களுக்கு ஓர் ஆசிரியப்பா

பாடலின் தலைப்பு : ”செயலில் காட்டுவம் நன்றியை”
பாடலின் யாப்பு : நேரிசை ஆசிரியப்பா
பாடலாசிரியர் : கா. விஜயநரசிம்மன் (vijay10.n@gmail.com)
பாடல் எழுந்த சூழல் : “எனக்குத் தெரிந்த ஒரு அம்மையார் தன் கல்லூரியில் ஆசிரியதிருநாள் விழா கொண்டாட்டத்தில் படிக்கத் தேவை என்று கேட்டுக்கொண்டதின் பேரில் இயற்றித் தரப்பட்ட பா” - ஆசிரியர்

பாடல் :

தாமரைத் திறக்கும் கதிர்போல் அறிவை
சூழ்திரைத் திறக்கும் துணையே கல்வி
காரிருள் விளக்கும் கைவிளக் கதுபோல்
ஆரிருள் அகற்றும் அருளே கல்வி
உறுநோய் அதனை ஒழிக்கும் மருந்தென         5
அறியா மைநோய் அழிப்பது கல்வி
இத்தகைக் கல்வி எளிய தன்றே
அத்தனைப் பேர்க்கும் அடைந்திட என்றே
மருதம் உழுது மண்ணுயிர்க் கமுதம்
அருளும் நல்லேர் உழவர் போலே                     10
நூற்பல உழுது நுவலும் அறிவை
பாற்படா தார்வம் படைத்தவர்க் கருளும்
நல்லா சிரியர் நிலமிசை உள்ளார்
எல்லா புகழ்க்கும் இருப்பிட மாக
பயிரென களையென பகுத்துப் பாரா                  15
துயிர்க்கெலாம் ஒருங்கே உதவும் மழைப்போல்
எளியோன் வலியோன் என்றெலாம் எண்ணா
தளியோ டனைவர்க்கும் அருளுவர் அன்னோர்
நமக்கவர் ஈந்த நல்லறி விற்குச்
சமமா குமோநாம் சொல்லும் நன்றியே           20
கரியதன் முன்னர் கடுகென ஆசான்
திருமுன் நாமுரை சொல்லதும் நாணுமே
பலனில் சொற்களை விடுத்துச்
செயலில் காட்டுவம் செய்நன் றியையே!       24

புதன், 4 ஆகஸ்ட், 2010

வாரும் புலவீர்காள்...

ஆர்வத்தின் வந்த அருங்கவிகள் அத்துனையும்
ஓர்வலையில் இட்டு உரைத்திட - சீர்வைத்த
சேவடி சேர்ந்தே பணிவோம் சிறக்கவே
தேவே அருள்நீ உவந்து!

(நேரிசை வெண்பா)

முதல் இடுகையை இறைவணக்கத்துடனே துவங்குகின்றேன். எனினும், எந்த ஒரு மதத்தின் இறைவனையும் குறித்துச் சொல்லவில்லை.

இனி இந்த வலை நமக்காக... நீங்கள் மரபுக் கவிதையில் ஆர்வமுள்ளவரெனின் (யாக்கவோ அல்லது படிக்கவோ!) உடனே இவ்வலையில் இணைந்து கொள்ளுங்கள், தங்களின் கவிகளையும் அனுப்பி வையுங்கள்...  இந்த வலை தோய்வின்றி பரபரப்பாக இயங்க ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும்...

அன்புள்ள,
விஜய் :-)